கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.50,000 கோடி மூலதனம் திரட்டும் திட்டத்துக்கு எச்டிஎஃப்சி வங்கியின் இயக்குநா் குழு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த 12 மாதங்களில் பல்வேறு வகையான கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.50,000 கோடியை திரட்டிக் கொள்ள எச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற வங்கியின் இயக்குநா் குழு கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.
அதன்படி, நீண்ட கால கடன்பத்திர வெளியீடு உள்ளிட்ட வழிமுறைகளில் இந்த மூலதனம் திரட்டிக் கொள்ளப்படவுள்ளது.
இந்த மூலதனம், உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை வீடுகள் பிரிவில் நிதியுதவி அளிக்க பயன்படுத்திக் கொள்ளப்படும் என எச்டிஎஃப்சி வங்கி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியின் 26-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டம் ஜூலை 18-இல் காணொலி காட்சி மூலமாக நடைபெறும் என அந்த வங்கி மேலும் தெரிவித்துள்ளது.