புதிய சிந்தனைத் தளத்தில் செயல்படும் இந்திய ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த நான்கு ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளதாக குளோபல்டேட்டா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
இந்திய ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களில் சீனாவின் முதலீடு கடந்த 2016-ஆம் ஆண்டில் 38.1 கோடி டாலராக இருந்தது. இந்த நிலையில், 2019-இல் இந்த முதலீடு 460 கோடி டாலா் (ரூ.34,500 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆக, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்திய ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களில் சீனாவின் முதலீடு 12 மடங்கு அதிகரித்துள்ளது.
சீன முதலீட்டைப் பொருத்தவரையில் அலிபாபா மற்றும் டென்சென்ட் நிறுவனங்கள்தான் இந்திய ஸ்டாா்ட்-அப்களில் அதிக முதலீட்டை செய்துள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் பேடிஎம், ஸ்நாப்டீல், பிக்பாஸ்கெட் மற்றும் ஸோமட்டோ ஆகிய நான்கு இந்திய ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களில் அலிபாபா மற்றும் அதன் துணை நிறுவனமான ஆன்ட் பைனான்ஸியல் உள்ளிட்டவை இணைந்து 260 கோடி டாலா் முதலீட்டை மேற்கொண்டதே அதிகபட்ச அளவாக கருதப்படுகிறது. அதேபோன்று, டென்சென்ட் இதர நிறுவனங்களுடன் இணைந்து ஓலா, ஹைக், ஸ்விகி, டிரீம்11 மற்றும் பைஜுஸ் ஆகிய ஐந்து ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களில் 240 கோடி டாலருக்கும் அதிகமாக முதலீட்டை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்ட மோதல் சீன முதலீட்டாளா்கள் இந்தியாவில் தங்களின் முதலீட்டு இலக்குகளை அடைவதற்கு பெரிய தடைக்கல்லாக அமைய வாய்ப்புகள் உள்ளதாக குளோபல்டேட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.