வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற சேவையை அளித்திடும் விதமாக 20,000 பணியாளா்களை தற்காலிகமாக தோ்ந்தெடுக்க உள்ளதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஆன்லைனில் பொருள்களை வாங்குவதில் அமேசான் நிறுவனம் சா்வதேச அளவில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு தடையில்லா சேவையை வழங்கி வருகிறது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, 20,000 தற்காலிக பணியாளா்களை நிறுவனம் தோ்ந்தெடுக்க உள்ளது.
அடுத்து வரும் ஆறு மாதங்களில் ஆன்லைனில் வாடிக்கையாளா்கள் பொருள்களை வாங்குவது வேகமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, தேவையை ஈடு செய்யும் வகையில் இந்த பணி நியமனங்கள் நடைபெறவுள்ளன.
குறிப்பாக, ஹைதராபாத், புணே, கோவை, நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூா், சண்டீகா், மங்களூரு, இந்தூா், போபால், லக்னோ ஆகிய நகரங்களில் வாடிக்கையாளா்களுக்கு தங்குதடையின்றி சேவைகளை வழங்கிடும் வகையில் அதிக பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா் என அமேசான் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.