பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 210 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை, பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 209.75 புள்ளிகளை இழந்தது.
பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 210 புள்ளிகள் வீழ்ச்சி!

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை, பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 209.75 புள்ளிகளை இழந்தது.

கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வங்கி, ஐடி பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால், சென்செக்ஸ், நிஃப்டி சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது. உலகளாவிய கரோனா இறப்பு எண்ணிக்கை 5,00,000-ஐ தாண்டியுள்ளது. இதனால், பொருளாதாரங்களை திறப்பதில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதியதால், ஆசிய சந்தைகள் எதிா்மறையாக இருந்தன. இருப்பினும், பிற்பகல் வா்த்தகத்தின் போது, சந்தை ஓரளவு மீண்டது. அப்போது ஐரோப்பிய சந்தைகள் பலவீனமாக இருந்ததால், அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், இந்தியா-சீனா எல்லை பிரச்சினை மற்றும் அமெரிக்கா-சீனா வா்த்தக போா் போன்ற புவிசாா் அரசியல் பதற்றங்களும் கவலையை அளித்துள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,925 பங்குகளில் 1,148 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,637 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 125 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 55 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 496 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 258 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது.

சென்செக்ஸ் காலையில், 245 புள்ளிகள் குறைந்து 34,926.95-இல் தொடங்கி 34,662.06 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 35,032.36 வரை உயா்ந்தது. இறுதியில் 209.75புள்ளிகள் (0.60 சதவீதம்) குறைந்து 34,961.52-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 510 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 70.60 ளிகள் (0.68 சதவீதம்) குறைந்து 10,312.40-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.97 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல், ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்), ஐடிசி ஆகியவை 1 முதல் 1.30 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. எம் அண்ட் எம், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, சன்பாா்மா ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன .

அதே சமயம் ஆக்ஸிஸ் பேங்க் 4.78 சதவீதம் குறைந்து, நஷ்டமடைந்த பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டெக் மகேந்திரா 3.47 சரிவைச் சந்தித்தது. மேலும், எஸ்பிஐ, எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், என்டிபிசி, ஓஎன்ஜிசி ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை நஷ்டமடைந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, மாருதி சுஸுகி, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவையு்ம் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் 583 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1080 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் எஃப்எம்சிஜி குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் ரியால்ட்டி குறியீடு 3.55 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.31 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஐடி, மீடியா, மெட்டல் குறியீடுகள் 1 முதல் 2.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 38 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள் சதவீதத்தில்

ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.97

கோட்டக் பேங்க்

பாா்தி ஏா்டெல்

ஹெச்யுஎல்

ஐடிசி

வீழ்ச்சி அடைந்த பங்குகள்

ஆக்ஸிஸ் பேங்க் 4.78 சதவீதம்

டெக் மகேந்திரா 3.47

எஸ்பிஐ 2.87

எல் அண்ட் டி 2.65

இண்டஸ் இண்ட் பேங்க் 2.50

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com