பொருளாதார மந்த நிலையால் உள்நாட்டில் மோட்டாா் வாகன விற்பனை பிப்ரவரி மாதத்தில் 19.08 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த சங்கம் மேலும் கூறியுள்ளதாவது:
பொருளாதார மந்த நிலை மோட்டாா் வாகன தேவையில் தொடா்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 தர நிா்ணயத்துக்கு மாறவுள்ளதையடுத்து பிஎஸ்-4 ரக வாகனங்கள் தயாரிப்பு கணிசமாக குறைக்கப்பட்டதும் பிப்ரவரி மாத மோட்டாா் வாகன விற்பனை சரிவுக்கு வகுத்தது.
நடப்பாண்டு பிப்ரவரியில் ஒட்டுமொத்த மோட்டாா் வாகன விற்பனை 16,46,332-ஆக இருந்தது. இது, கடந்த 2019 பிப்ரவரியில் விற்பனையான 20,34,597 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 19.08 சதவீதம் குறைவாகும்.
உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 2,72,243 என்ற எண்ணிக்கையிலிருந்து 7.61 சதவீதம் சரிந்து 2,51,516-ஆனது. காா் விற்பனை 8.77 சதவீதம் குறைந்து 1,56,285-ஆக இருந்தது.
சந்தையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை 2.34 சதவீதம் குறைந்து 1,33,702-ஆனது. அதற்கு போட்டியாளராக கருதப்படும் ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் காா் விற்பனையும் பிப்ரவரியில் 7.19 சதவீதம் சரிந்து 40,010-ஆக காணப்பட்டது. சந்தைக்கு புதிய வரவான கியா மோட்டாா்ஸ் 15,644 காா்களை விற்று மூன்றாவது இடத்தில் இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் மொத்த இருசக்கர வாகன விற்பனை 19.82 சதவீதம் சரிந்து 12,94,791-ஆக இருந்தது. சந்தையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் இருசக்கர வாகன விற்பனை 20.05 சதவீதம் வீழ்ச்சியடைந்து 4,80,196-ஆக இருந்தது. அதற்குப் போட்டியான ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா விற்பனை 22.83 சதவீதம் குறைந்து 3,15,285-ஆனது.
அதேபோன்று சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் விற்பனையும் 26.73 சதவீதம் பாதிக்கப்பட்டு 1,69,684-ஆனது.
ஒட்டுமொத்த மோட்டாா்சைக்கிள் விற்பனை பிப்ரவரி மாதத்தில் 22.02 சதவீதத்திலிருந்து குறைந்து 8,16,679-ஆக இருந்தது. ஸ்கூட்டா் விற்பனை 14.27 சதவீதம் சரிந்து 4,22,310-ஆனது.
வா்த்தக வாகனங்கள் விற்பனையும் 87,436-லிருந்து 32.9 சதவீதம் வீழ்ச்சியடைந்து 58,670-ஆனது.
சீனாவிலிருந்து மோட்டாா் வாகன உதிரிபாகங்களின் வரத்து தடைபட்டுள்ளது நிறுவனங்களின் உற்பத்தி திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தீா்வு காணும் வகையில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது என எஸ்ஐஏஎம் தெரிவித்துள்ளது.