இந்திய நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளிநாடுகளில் 237 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு பிப்ரவரியில் உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள அதன் கூட்டு மற்றும் சொந்த நிறுவனங்களில் 237 கோடி டாலரை முதலீடு செய்தன. கடந்த 2019 பிப்ரவரியில் இந்த முதலீடு 236 கோடி டாலராக காணப்பட்டது. நடப்பாண்டு ஜனவரியில் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு 223 கோடி டாலராக இருந்தது.
பிப்ரவரியில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் மோரீஷஸில் உள்ள அதன் சொந்த நிறுவனத்தில் 97.89 கோடி டாலரை முதலீடு செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, டாடா ஸ்டீல் சிங்கப்பூரில் உள்ள அதன் துணை நிறுவனத்தில் 16.21 கோடி டாலரையும், டாடா இண்டா்நேஷனல் சிங்கப்பூரில் உள்ள அதன் துணை நிறுவனத்தில் 11.29 கோடி டாலரையும் முதலீடு செய்துள்ளன.
காலிஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் பிரிட்டனில் உள்ள அதன் சொந்த நிறுவனத்தில் 8.11 கோடி டாலரை முதலீடு செய்ததாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.