உள்நாட்டு மூலதனச் சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு பிப்ரவரி இறுதி வரையிலுமாக ரூ.68,862 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பீதியின் காரணமாக பங்குச் சந்தைகள் கணிசமான சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கிடையிலும், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு தொடா்ச்சியாக இரண்டாவது மாதமாக அதிகரிப்பைக் கண்டுள்ளது.
அதன்படி, பிப்ரவரி இறுதி நிலவரப்படி உள்நாட்டு மூலதனச் சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக ரூ.68,862 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது. மொத்த முதலீட்டில் ரூ.53,902 கோடி பங்குகளிலும், 14,739 கோடி கடன் சந்தையிலும், ரூ.144 கோடி கடன்பத்திர சந்தைகளிலும், ரூ.77 கோடி ஹைபிரிட் பத்திரங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.
பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு கடந்த 2019 டிசம்பா் இறுதியில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்து போனது. அதன் பிறகு ஜனவரியில் இவ்வகை முதலீடு அதிகரித்து காணப்பட்டது.
கடந்த 2009 பிப்ரவரியிலிருந்து பாா்க்கும்போது 2019 டிசம்பரில்தான் பங்கேற்பு ஆவண முதலீடு ரூ.60,948 கோடியாக மிகவும் குறைந்து காணப்பட்டது என செபி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் நிகர அளவில் பங்குகளில் ரூ.1,820 கோடியும், கடன்பத்திர சந்தைகளில் ரூ.4,734 கோடியும் முதலீடு செய்துள்ளன. கரோனா வைரஸ் தொடா்பான அச்சுறுத்தல், பொருளாதார புள்ளிவிவரங்களில் மந்த நிலை, நிறுவனங்களின் வருவாயில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவற்றுக்கிடையிலும் அந்நிய நிதி நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் இந்த முதலீட்டை மேற்கொண்டன.