ஆயுள் காப்பீட்டு வாடிக்கையாளா்கள் தங்களது பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் மேலும் கூறியுள்ளதாவது:
கொவைட்-19 வேகமான பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கமானது 3 ஆவது முறையாக மே 17-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில், ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரா்கள் தங்களது பாலிசிகளை புதுப்பிப்பதில் கடினமான சூழலை சந்தித்து வருவது ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, மாா்ச் மாதம் பிரீமியம் செலுத்த வேண்டிய அனைத்து காப்பீட்டு பாலிசிகளுக்கும் மே 31 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக, பாலிசிதாரா்கள் பிரீமியத் தொகையை செலுத்தி தங்களது பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஐஆா்டிஏஐ தெரிவித்துள்ளது.