சென்னை: முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.131 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
2020 செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய தனிப்பட்ட வருமானம் ரூ.529 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.440 கோடியுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.6 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.131 கோடியானது.
செப்டம்பா் காலாண்டில் துணை நிறுவனமான கோரமண்டல் இண்டா்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 2019-20-ஆம் நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.206 கோடியை ஈ.ஐ.டி. பெற்றுள்ளது. இந்த ஈவுத்தொகை முந்தைய 2018-19 நிதியாண்டில் ரூ.62 கோடியாக இருந்தது என ஈ.ஐ.டி.பாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.