புது தில்லி: உலகின் மிக பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்திய செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருவாய் கடந்த நிதியாண்டில் 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக டாஃப்ளர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவணங்களை மேற்கொள்காட்டி அந்த ஆய்வு நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அதன் வர்த்தக நடவடிக்கைகளை விறுவிறுப்பாக்கி வருகிறது. அதனை எடுத்துக்காட்டும் விதமாக, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.13,755.8 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, 2019-ஆம் ஆண்டு மார்ச் 31}ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.10,673.7 கோடியுடன் ஒப்பிடும்போது 29 சதவீதம் அதிகமாகும்.
அதேபோன்று, ஆப்பிள் நிறுவனத்தின் நிகர லாபமும் ரூ.267.27 கோடியிலிருந்து பன்மடங்கு அதிகரித்து ரூ.926.2 கோடியை எட்டியுள்ளது என டாஃப்ளர் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் பிரீமியம் வகை ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங், ஒன்ப்ளஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.