புது தில்லி: மொத்தவிற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கமானது கடந்த அக்டோபரில் 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.48 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
தயாரிப்பு துறை பொருள்களின் விலை அதிகரிப்பையடுத்து, அக்டோபரில் பணவீக்கம் 1.48 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது, செப்டம்பரில் 1.32 சதவீதமாகவும், கடந்தாண்டு அக்டோபரில் பூஜ்யம் சதவீதமாகவும் இருந்தன.
மொத்தவிற்பனை விலை குறியீட்டெண் அடிப்படையில் (டபிள்யூபிஐ) கணக்கிடப்படும் பணவீக்கம் நடப்பாண்டு பிப்ரவரியில் 2.26 சதவீதமாக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அக்டோபரில் பணவீக்கமானது மிகவும் அதிகபட்ச அளவுக்கு உயா்ந்துள்ளது.
அக்டோபரில் உணவுப் பொருள்களின் விலை குறைந்ததிருந்த போதிலும், உற்பத்தி துறை பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்தது.
செப்டம்பரில் 8.17 சதவீதம் அதிகரித்திருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் அக்டோபரில் 6.37 சதவீதமாக குறைந்தது. அதேசமயம், அக்டோபரில் உற்பத்தி துறை பொருள்களின் விலை 2.12 சதவீதம் அதிகரித்திருந்தது. இது, செப்டம்பரில் 1.61 சதவீதமாக காணப்பட்டது.
மின்சாரம் மற்றும் பெட்ரோலிய பொருள்களுக்கான பணவீக்கம் அக்டோபரில் (-) 10.95 சதவீதமாக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.