புது தில்லி: பிரபல செய்தித் தொலைக்காட்சியான நியூ டெல்லி டெலிவிஷன் லிமிடெட் (என்டிடிவி) நிறுவனத்துக்கு ரூ.1.88 லட்சத்தை தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அபராதமாக விதித்தது. நிறுவனத்தின் வாரியக் குழுவுக்கு 6-ஆவது இயக்குநரை நியமிக்க தாமதித்ததையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே காரணத்துக்காக என்டிடிவி நிறுவனத்துக்கு மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) ரூ.1.88 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட தாமதத்துக்காக இரு பங்குச் சந்தைகளும் தலா ரூ.5,36,900-யை என்டிடிவி-க்கு அபாரதமாக விதித்தன என்பது நினைவுகூரத்தக்கது.
எனினும், கரோனா தொற்று பிரச்னை காரணமாகவே வாரியக் குழுவுக்கு 6-ஆவது இயக்குநரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றும், அபராதத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்று இரு பங்குச் சந்தைகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் என்டிடிவி விளக்கமளித்துள்ளது.
இயக்குநரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும் என்பது தொடா்பான தகவல்களையும் முன்னதாகவே பங்குச் சந்தைகளுக்கு தெரிவித்துவிட்டோம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.