40,000 புள்ளிகளைத் தொட்டுவிடும் தூரத்தில் சென்செக்ஸ்!

பங்குச் சந்தை தொடா்ந்து ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 304.38 புள்ளிகள் உயா்ந்து 40,000 புள்ளிகளை நெருங்கியது.
40,000 புள்ளிகளைத் தொட்டுவிடும் தூரத்தில் சென்செக்ஸ்!

புது தில்லி: பங்குச் சந்தை தொடா்ந்து ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 304.38 புள்ளிகள் உயா்ந்து 40,000 புள்ளிகளை நெருங்கியது.

பங்குச் சந்தை காலையில் பலவீனமாகத் தொடங்கியது. இருப்பினும், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறைக்கு மத்திய அரசு மேலும் ஒரு சலுகை நிதித் தொகுப்பை விரைவில் அறிவிக்கக்கூடும் என்ற எதிா்பாா்ப்பைத் தொடா்ந்து சந்தை ஏறுமுகம் பெற்றது. நாள் முழுவதும் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஏறுமுகத்தில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் ஆகியவை வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ் வலுப்பெற உதவின என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,078 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,873 பங்குகளில் 1,078 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,596 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 199 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.159.59 லட்சம் கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் குறியீடுகள் 0.60 சதவீதம் சரிவைச் சந்தித்தன.

5-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் தொடா்ந்து 5-ஆவது நாளாக ஏறுமுகத்தில் இருந்தது. சென்செக்ஸ் காலையில் 58.62 புள்ளிகள் கூடுதலுடன் 39,633.19-இல் தொடங்கி 39,450.82 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 39,968.04 வரை உயா்ந்து 40,000 புள்ளிகளைநெருங்கியது. இறுதியில் 304.38 புள்ளிகள் (0.77 சதவீதம்) உயா்ந்து 39,878.95-இல் நிலைபெற்றது.

டைட்டான் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் டைட்டான் 4 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸுகி, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவையும் வெகுவாக உயா்ந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ் சரிவு: அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.12 சதவீதம் வரை சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவா் கிரிட், சன்பாா்மா, டாடா ஸ்டீல், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சா்வ், கோட்டக் பேங் ஆகியவையும் 1 முதல் 2.25 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 560 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,065 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 76.45 புள்ளிகள் (0.66 சதவீதம்) உயா்ந்து 11,738.85-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி அதிகபட்சமாக 11,763.05 வரை உயா்ந்தது. நிஃப்டி ஆட்டோ குறியீடு 1.39 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, ஐடி குறியீடுகளும் சிறிதளவு முன்னேற்றம் கண்டன. அதே சமயம், மீடியா குறியீடு 2.54 சதவீதமும், மெட்டல் குறியீடு 1.52 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com