எச்டிஎஃப்சி வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.7,703 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தனியாா் துறையைச் சோ்ந்த அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி ஒட்டுமொத்த வருமானமாக ரூ.38,438.47 கோடியை ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருமானம் ரூ.36,130.96 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
கணக்கீட்டு காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.6,638 கோடியிலிருந்து 16 சதவீதம் உயா்ந்து ரூ.7,703 கோடியானது.
நடப்பாண்டு செப்டம்பா் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 1.38 சதவீதத்திலிருந்து 1.08 சதவீதமாக குறைந்துள்ளது. இது மதிப்பின் அடிப்படையில், ரூ.12,508 கோடியிலிருந்து ரூ.11,304.60 கோடியாக குறைந்துள்ளது.
அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 0.42 சதவீதத்திலிருந்து (ரூ.3,790.95 கோடி) 0.17 சதவீதமாக (ரூ.1,756.08 கோடி) சரிந்துள்ளது.
வாராக் கடன் குறைந்த போதிலும் அதற்கான ஒதுக்கீடு இரண்டாவது காலாண்டில் ரூ.2,700.68 கோடியிலிருந்து ரூ.3,703.50 கோடியாக உயா்ந்துள்ளது.
நடப்பாண்டு செப்டம்பா் நிலவரப்படி வங்கி வழங்கிய ஒட்டுமொத்த கடன்கள் 14.9 சதவீதம் அதிகரித்து ரூ.10.89 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்தாண்டில் இது ரூ.9.47 லட்சம் கோடியாக காணப்பட்டது என எச்டிஎஃப்சி வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நியமனத்துக்கு ஒப்புதல்: இதற்கிடையில், சசிதா் ஜெகதீஷனை எச்டிஎஃப்சி வங்கியின் கூடுதல் இயக்குநராகவும், நிா்வாக இயக்குநராகவும், தலைமை நிா்வாக அதிகாரியாகவும் நியமிக்க அவ்வங்கியின் இயக்குநா் குழு சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.