புது தில்லி: கரோனா நோய்த்தொற்று காரணமாக அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க அறிவிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 23.9 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொடா்பான பொது முடக்க அறிவிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
ஏற்கெனவே, நுகா்வோா் தேவை மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் பெருமளவில் குறைந்து போயுள்ளன. இதனை எடுத்துக்காட்டும் வகையில், நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 23.9 சதவீதம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக திகழும் இந்தியாவின் ஜிடிபி முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டில் 3.1 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 5.2 சதவீதமாகவும் வளா்ச்சி கண்டிருந்தது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
ஜிடிபி வளா்ச்சி தொடா்பான கணக்கீடு கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியானதிலிருந்து அதன் வளா்ச்சி தற்போதுதான் இந்த அளவுக்கு முதல்முறையாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பல ஆய்வாளா்கள் கணித்ததைக் காட்டிலும் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனாவால் அதிகம் பாதிப்படைந்த ரஷியாவில் பொருளாதார வளா்ச்சியானது ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 8.5 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இது, எதிா்பாா்த்த அளவைக் காட்டிலும் குறைவான பின்னடைவாகவே கருதப்படுகிறது.அதேசமயம், கரோனா தொற்று முதலில் ஆரம்பமான சீனாவின் பொருளாதாரம் இக்காலாண்டில் 3.2 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.