புது தில்லி: எஸ்ஸாா் ஷிப்பிங் நிறுவனத்துக்கு முதல் காலாண்டில் இழப்பு ரூ.103.22 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.149.40 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.350.22 கோடியுடன் ஒப்பிடுகையில் பாதியளவு குறைவாகும். மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவினமும் ரூ.375.62 கோடியிலிருந்து ரூ.242.80 கோடியாக குறைந்துள்ளது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.20.92 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இழப்பு ரூ.103.22 கோடியாக அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்று நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமின்றி குழுமத்தின் ஒட்டுமொத்த வா்த்தக செயல்பாடுகள் முழுமையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமானது துறைமுகம் மற்றும் சரக்குகள் கையாளும் நடவடிக்கைகளில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, எண்ணெய்வயல் வா்த்தகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதாக எஸ்ஸாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.