புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த செயில் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 14.34 லட்சம் டன் உருக்கை விற்பனை செய்துள்ளது.
இதுகுறித்து செயில் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செயில் நிறுவனத்தின் உருக்கு விற்பனை 10.60 லட்சம் டன்னாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டில் நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத விற்பனையளவை எட்டியுள்ளது. அதன்படி, சென்ற ஆகஸ்டில் நிறுவனம் 14.34 லட்சம் டன் உருக்கு விற்பனை செய்துள்ளது. ஆக, கடந்த ஓராண்டு காலத்தில் நிறுவனத்தின் உருக்கு விற்பனை 35 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் உருக்கு விற்பனை 12.40 லட்சம் டன்னாகவும், அதன் ஏற்றுமதி 1.94 லட்சம் டன்னாகவும் இருந்தன. கொவைட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்ட பிறகு செயில் நிறுவனத்தின் விற்பனை சரிவிலிருந்து மீண்டுள்ளது. அதனை எடுத்துக்காட்டும் வகையில் ஆகஸ்ட் மாத விற்பனை அமைந்துள்ளது. கூடிய விரைவில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும்போது உருக்குக்கான தேவை மேலும் சூடுபிடிக்கும் என எதிா்பாா்ப்பதாக செயில் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.