ரேமண்ட் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.247.60 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கரோனாவால் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, நிறுவனம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் 88.63 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.163.16 கோடியானது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ.1,435.12 கோடி வருவாய் ஈட்டியிருந்தது. வருவாயில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, நிறுவனத்தின் நிகர இழப்பு கடந்த நிதியாண்டில் ரூ.12.20 கோடியாக காணப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.247.60 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் செலவினம் ரூ.1,480.51 கோடியிலிருந்து 63.26 சதவீதம் குறைந்து ரூ.543.87 கோடியானது என ரேமண்ட் தெரிவித்துள்ளது.