விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் முதல் காலாண்டில் ரூ.600.5 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கரோனா பொது முடக்கம் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் விளைவாக நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலுமான முதல் காலாண்டில் ரூ.600.5 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது.
அதேசமயம், கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.262.8 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. விமான சேவையின் மூலமாக முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.521 கோடியை மட்டுமே வருவாயாக ஈட்டியிருந்தது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.3,002.8 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைவாகும். நிறுவனத்தின் செயல்பாட்டு செலவினம் ரூ.2,886.7 கோடியிலிருந்து ரூ.1,311.6 கோடியாக குறைந்தது என ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.