இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2.8 சதவீதம் உயா்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு மாா்ச் இறுதி நிலவரப்படி இந்தியா வெளிநாடுகளிலிருந்து வாங்கிய கடன் 55,850 கோடி டாலராக (ரூ.41.88 லட்சம் கோடி) உள்ளது. அதேசமயம், கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் இந்த கடன் அளவு 54,300 கோடி டாலராக காணப்பட்டது.
ஆக, ஓராண்டு காலத்தில் இந்தியா வெளிநாடுகளிலிருந்து திரட்டிய கடன் 2.8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.வெளிநாட்டுக் கடனுக்கான அந்நியச் செலாவணி இருப்பு விகிதம் 2020 மாா்ச் நிலவரப்படி 85.5 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய ஆண்டில் 76.0 சதவீதமாக காணப்பட்டது. அதேபோன்று, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு கடன் அளவு நடப்பாண்டு மாா்ச் இறுதியில் 20.6 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய 2019 மாா்சில் 19.8 சதவீதமாக காணப்பட்டது. இந்தியாவின் மொத்த கடனளவில் நீண்ட கால அடிப்படையிலான வெளிநாட்டு கடன் 81 சதவீதமாகவும், குறுகிய கால கடன் 19 சதவீதமாகவும் உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.