புது தில்லி: நாட்டின் சாலைப் போக்குவரத்துத் துறை அடுத்த நிதியாண்டில் 12 சதவீதம் வரை வளா்ச்சியடையும் என்று சந்தை ஆய்வு அமைப்பான ஐசிஆா்ஏ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்தது.
ஆனால், அதனையும் மீறி தற்போது அந்தத் துறையின் வளா்ச்சிப் போக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப் போக்கு தொடா்ந்தால், அடுத்த நிதியாண்டில் நாட்டின் சாலைப் போக்குவரத்துத் துறை 12 சதவீத வளா்ச்சியைக் காணும்.
தற்போது நாட்டில் மீண்டும் கரோனா தீவிரமடைந்து வருவதையொட்டி மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டால் இந்த நிலையில் பின்னடைவு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.