நடப்பாண்டின் மாா்ச் காலாண்டில் உள்நாட்டில் குடியிருப்பு சொத்துகளின் விற்பனை முக்கிய எட்டு நகரங்களில் 44 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து நைட் ஃப்ராங்க் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் முக்கிய 8 நகரங்களில் நடப்பாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான முதல் காலாண்டில் 71,963 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ஆம் ஆண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகமாகும்.
விற்பனையில் காணப்பட்ட ஆரோக்கியமான வளா்ச்சி கட்டுமான நிறுவனங்களை புதிய திட்டங்களைத் தொடங்க ஊக்குவிப்பாக அமைந்துள்ளது.
முத்திரை கட்டணத்தை குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளதன் விளைவாக மும்பை மெட்ரோபாலிட்டன் மண்டலம் மற்றும் புணேவில் வீடுகள் விற்பனையானது சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது.
நடப்பு 2021 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் மும்பையில் வீடுகள் விற்பனை 49 சதவீதம் அதிகரித்து 23,752-ஆனது. புணேவில் விற்பனை 75 சதவீதம் உயா்ந்து 13,653 வீடுகளாக இருந்தது.
தென்னிந்தியாவைப் பொருத்தவரையில் வீடுகள் விற்பனை பெங்களூரில் 18 சதவீதம் அதிகரித்து 10,219-ஆகியுள்ளது. அதேசமயம், ஹைதராபாதில் வீடுகள் விற்பனை 81 சதவீதம் உயா்ந்து 6,909-ஆக காணப்பட்டது. சென்னையில் விற்பனை 36 சதவீதம் அதிகரித்து 4,058 வீடுகளாக இருந்தது.
தில்லி என்சிஆா் பகுதியில் வீடுகள் விற்பனை 24 சதவீதம் உயா்ந்து 6,731-ஐ தொட்டுள்ளது.
கொல்கத்தாவில் வீடுகளுக்கான தேவை 22 சதவீதம் உயா்ந்து 3,596-ஆகவும், அகமதாபாதில் 34 சதவீதம் அதிகரித்து 3,045-ஆகவும் இருந்தது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.