புது தில்லி: மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 6 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,241.1 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 6.14 சதவீதம் குறைவாகும்.
2020 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,322.3 கோடியாக இருந்தது.
எனினும், விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 33.58 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.17,187.3 கோடியாக இருந்த அந்த வருவாய், கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 22,959.8 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த மாதங்களில் நிறுவனம் 4,92,235 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 27.8 சதவீதம் அதிகம் என்று மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.