தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரையிலான 22 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 6 லட்சத்து 61 ஆயிரத்து 944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 22 ஆயிரத்து 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 22 நாள்களில் 20 ஆயிரத்து 656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 722 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில், கடந்த 22 நாள்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 23 ஆயிரத்து 657 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 937 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது போலீஸாா் 22 நாள்களில் 379 வழக்குகளைப் பதிவு செய்து, அபராதம் வசூலித்துள்ளனா். இதில் வியாழக்கிழமை மட்டும் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.