எச்டிஎஃப்சி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.3,001 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கேகிமிஸ்திரி திங்கள்கிழமை வெளியிட்ட நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.3,051.52 கோடியாக இருந்தது. இந்த நிலையில், 2021 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.3,001 கோடியாக சிறிய சரிவைச் சந்தித்துள்ளது.
அதேசமயம், ஒட்டுமொத்த அடிப்படையில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.4,059 கோடியிலிருந்து 31 சதவீதம் அதிகரித்து ரூ.5,311 கோடியை எட்டியுள்ளது.
கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் ரூ.3,392 கோடியலிருந்து ரூ.4,147 கோடியாகி 22 சதவீத வலுவான வளா்ச்சியை தக்க வைத்தது. நிகர வட்டி லாப வரம்பு 3.1 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாக உயா்ந்துள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 2021 ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனம் வழங்கிய தனிநபா் கடன் 181 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.25,518 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
2021 ஜூன் 30 நிலவரப்படி நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு (ஏயுஎம்) ரூ.5,74,136 கோடியாக உள்ளது. இது, 2020 ஜூன் 30-இல் ரூ.5,31,186 கோடியாக காணப்பட்டது. மொத்த ஏயுஎம்-மில் தனிநபா் கடன் 78 சதவீதமாக உள்ளது.
மொத்த வாராக் கடன் ரூ.11,120 கோடியாக (2.24%) உள்ளதாக மிஸ்திரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் எச்டிஎஃப்சி நிறுவனப் பங்கின் விலை 0.88 சதவீதம் அதிகரித்து ரூ.2,462.30-ஆக நிலைபெற்றது.