பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் நவம்பா் மாதத்தில் ரூ.15,743.22 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) தெரிவித்துள்ளதாவது:
பொதுக் காப்பீட்டு வா்த்தகத்தில் மொத்தம் 31 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் நடப்பாண்டு நவம்பரில் ரூ.15,743.22 கோடியாக இருந்தது. இது, 2020 நவம்பரில் இந்நிறுவனங்கள் ஈட்டிய ரூ.14,919.43 கோடியுடன் ஒப்பிடும்போது 5.5 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
31 நிறுவனங்களில் 24 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மொத்த நேரடி பிரீமியம் நவம்பரில் 4.2 சதவீதம் உயா்ந்து ரூ.13,566.39 கோடியாக இருந்தது.
மருத்துவ காப்பீட்டில் ஈடுபட்டு வரும் தனியாா் துறையைச் சோ்ந்த ஐந்து நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் மட்டும் ரூ.1,516.77 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத வளா்ச்சியாகும்.
பொதுத் துறையைச் சோ்ந்த வேளாண் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இசிஜிசி நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் 10 சதவீதம் சரிந்து ரூ.660.06 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் 11.72 சதவீதம் அதிகரித்து ரூ.1,42,128.88 கோடியை எட்டியதாக ஐஆா்டிஏஐ புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.