புது தில்லி: நாட்டின் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் 27.16 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் ஏற்றுமதி சென்ற நவம்பர் மாதத்தில் 27.16 சதவீதம் அதிகரித்து 3,004 கோடி டாலராக இருந்தது. பெட்ரோலிய பொருள்கள், பொறியியல், மின்னணு சாதனங்கள் ஆகிய துறைகளின் செயல்பாடு கணக்கீட்டு மாதத்தில் சிறப்பாக இருந்தது.
கடந்த 2020}ஆம் ஆண்டு நவம்பரில் ஏற்றுமதி2,362 கோடி டாலராக காணப்பட்டது.
இறக்குமதி 3,381 கோடி டாலரிலிருந்து 56.58 சதவீதம் உயர்ந்து 5,294 கோடி டாலரை எட்டியது.
குறிப்பாக, தங்கம் இறக்குமதி மதிப்பீட்டு மாதத்தில் சுமார் 40 சதவீதம் அதிகரித்து 302 கோடி டாலரிலிருந்து 422 கோடி டாலராக உயர்ந்தது.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 1,019 கோடி டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறை நடப்பாண்டில் 2,291 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத காலகட்டத்தில் ஏற்றுமதி 26,357 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டு ஏற்றுமதி அளவான 17,416 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 51.34 சதவீதம் அதிகமாகும்.
இந்த காலகட்டத்தில் இறக்குமதியும் 21,982 கோடி டாலரிலிருந்து 74.84 சதவீதம் உயர்ந்து 38,434 கோடி டாலரைத் தொட்டது என புள்ளிவிவரத்தில் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.