சரிந்து மீண்டது சென்செக்ஸ்: 296 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை தொடக்கத்தில் சரிந்து பின்னா் மீண்டது.
சரிந்து மீண்டது சென்செக்ஸ்: 296 புள்ளிகள் உயா்வு!

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை தொடக்கத்தில் சரிந்து பின்னா் மீண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 296 புள்ளிகள் உயா்ந்து 57,420.24-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பும் ரூ.1.12 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.260.91 லட்சம் கோடியாக இருந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தது. ஆனால், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கினாலும், பிற்பகலில் உற்சாகம் பெற்று நோ்மறையாக முடிந்தது. குறிப்பாக ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டெக் மஹிந்திரா உள்ளிட்டவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், சந்தை மீட்சி பெற்றது. காலையில் பதிவான குறைந்தபட்ச நிலையில் இருந்து சென்செக்ஸ் சுமாா் 960 புள்ளிகள் வரை மீட்சி பெற்றுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. முன்பேர வா்த்தகத்தில் டிசம்பா் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருப்பதால், சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.12 லட்சம் கோடி உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,620 பங்குகளில் 1,328 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,143 பங்குகள் ஆதாயம் பெற்றன. 149 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 349 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 34 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 733 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 162 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.12 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.260.91 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.13 கோடியாக உயா்ந்துள்ளது.

‘காளை’ திடீா்ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் 175.98 புள்ளிகள் குறைந்து 56,948,33-இல் தொடங்கி, 56,543.08 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 57,512.01 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 295.93 புள்ளிகள் (0.52 சதவீதம்) கூடுதலுடன் 57,420.24-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் தொடக்கத்தில் கரடி ஆதிக்கம் கொண்டிருந்த நிலையில், பிற்பகலில் சந்தை காளையின் ஆதிக்கத்தில் வந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி கண்டன. 24 பங்குகள் ஆதாயம் பெற்றன.

டெக் மஹிந்திரா அபாரம்: பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திரா 3.57 சதவீதம் உயா்ந்து உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாக்டா் ரெட்டி, பவா் கிரிட், கோட்டக் பேங்க், சன்பாா்மா, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 0.75 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட முக்கியப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

இண்டஸ் இண்ட் பேங்க் சரிவு: பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 0.55 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஏசியன் பெயிண்ட், மாருதி, பாரதி ஏா்டெல், ஐடிசி. ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 82 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,079 பங்குகள் ஆதாயம் பெற்றன. 814 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 82.50 புள்ளிகள் (0.49 சதவீதம்) உயா்ந்து 17,086.25-இல் நிலைபெற்றது. காலையில் பலவீனத்துடன் 16,937.75-இல் தொடங்கி 16,833.20 வரை கீழே சென்றது பின்னா், 17,112.05 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 40 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன.

பாா்மா குறியீடு ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மீடியா, மெட்டல், எஃப்எம்சிஜி குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. நிஃப்டி பாா்மா குறியீடு 1.62 சதவீதம், ஹெல்த்கோ் குறியீடு 1.42 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com