பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.6,556.98 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் வருமானம் ரூ.7,278.29 கோடியாக அதிகரித்திருந்தது.
வட்டி வருமானம் ரூ.6,028.88 கோடியிலிருந்து ரூ.5,782.61 கோடியாக குறைந்துள்ளது.
நிகர லாபம் ரூ.155.32 கோடியிலிருந்து 6.5 சதவீதம் அதிகரித்து ரூ.165.41 கோடியைத் தொட்டது.
2020 டிசம்பா் இறுதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் 19.99 சதவீதத்திலிருந்து 16.30 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 9.26 சதவீதத்திலிருந்து 4.73 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை 0.13 சதவீதம் குறைந்து ரூ.14.81-இல் நிலைபெற்றது.