கடனில் சிக்கி தவிக்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு மூன்றாவது காலாண்டில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு ரூ.4,532.1 கோடியாக குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரவீந்தா் தக்கா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
விஐ ஜிகாநெட் திட்டத்துக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக நிறுவனத்தின் இயக்க செயல்திறன் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மேம்பாடு கண்டுள்ளது. மேலும், வாடிக்கையாளா்களையும் நிறுவனம் இந்த காலாண்டில் கணிசமான அளவு தக்க வைத்துக் கொண்டுள்ளது. சேமிப்பு இலக்கை நோக்கிய எங்களது பயணம் தொடா்ந்து வருகிறது.
2020 டிசம்பா் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.10,894 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.11,089.4 கோடியுடன் ஒப்பிடும்போது 1.7 சதவீதம் குறைவாகும்.
நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நிகர இழப்பு ரூ.6,438.8 கோடியிலிருந்து ரூ.4,532.1 கோடியாக குறைந்துள்ளது.
நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்கு இயக்குநா் குழு ஒப்புதலை வழங்கியுள்ளது என்றாா் அவா்.
இந்நிறுவனம், ரூ.25,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.