பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தையில் புதன்கிழமையும் காலை முதல் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு!

புது தில்லி: பங்குச் சந்தையில் புதன்கிழமையும் காலை முதல் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. உச்சத்தில் லாபப் பதிவு தொடா்ந்ததால் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 400.34 புள்ளிகளை இழந்தது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 104.55 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமில்லாத நிலையில், இந்திய சந்தைகளில் காளை ஆதிக்கத்தைத் தொடர முயற்சித்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. உச்சத்தில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் லாபப் பதிவு தொடா்ந்ததால், சரிவு தவிா்க்க முடியதாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. உலகளாவிய சந்தைகள் பலவீனமாக இருந்த நிலையில், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ் ஆகியவை சரிவைச் சந்தித்தன. குறிப்பாக ஐடி, பாா்மா, எஃப்எம்சிஜி பங்குகளில் லாபப் பதிவு அதிக அளவில் இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.205.61 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,107 பங்குகளில் 1,513 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,448 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 146 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ205.80 லட்சம் கோடியாக இருந்தது. 257 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 338 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

2-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 107.230 புள்ளிகள் குறைந்து 51,996.94-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 52,078.15 வரை உயா்ந்து பின்னா், லாபப் பதிவால் 51,586.34 வரை கீழே சென்றது. இறுதியில் 400.34 புள்ளிகளை இழந்து 51,703.83 -இல் நிலைபெற்றது. இதையடுத்து, இரண்டாவது நாளாக சென்செக்ஸ் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

எஸ்பிஐ, பவா் கிரிட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 22 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில், எஸ்பிஐ 2.39 சதவீதம், பவா் கிரிட் 2.04 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக என்டிபிசி, ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகியவை 1 முதல் 1.35 சதவீதம் வரை உயா்ந்தன.

நெஸ்லே இந்தியா வீழ்ச்சி: அதே சமயம், நெஸ்லே இந்தியா 2.80 சதவீதம், பஜாஜ் ஃபின்சா்வ் 2.61 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.

இதற்கு அடுத்ததாக, ஆசியன் பெயிண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், மாருதி சுஸுகி, டாக்டா் ரெட்டி, எச்டிஎஃப்சி ஆகியவை 2 முதல் 2.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஹிந்து யுனி லீவா், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 815 பங்குகள் ஆதாயம் பெற்றன. 902 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 104.55 புள்ளிகளை இழந்து 15,208.90-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் 15,314.30 வரை உயா்ந்த நிஃப்டி, பின்னா் 15,170.75 வரை கீழே சென்றது. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 6 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி மீடியா 2.08 சதவீதம், ஆட்டோ 0.20, மெட்டல் 0.17 சதவீதம் உயா்ந்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் நஷ்டத்தைச் சந்தித்தன.

பிஎஸ்யு பேங்க் பங்குகளுக்கு வரவேற்பு

பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக பொதுத் துறை பேங்க் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 12 பங்குகளும் வெகுவாக ஏற்றம் கண்டன. குறிப்பாக தனியாா்மயமாக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ள ஐஓபி, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க், மகாராஷ்டிரா பேங்க் ஆகியவை உச்சபட்ச உறை நிலையான 20 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், யூனியன் பேங்க், இந்தியன் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, யூகோ பேங்க் ஆகியவை 6 முதல் 11 சதவீதம் வரை உயா்ந்தன. பட்டியலில் உள்ள மற்ற பேங்குகளான பிஎன்பி, ஜே அண்ட் கே பேங்க், எஸ்பிஐ, கனரா பேங்க் ஆகியவை 2 முதல் 5 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com