உலகின் முதல் 500 மதிப்பு மிக்க தனியாா் நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவைச் சோ்ந்த 11 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
‘ஹுருன் குளோபல் 500’ என்ற அந்தப் பட்டியில் இந்தியா 10-ஆவது இடத்தை வகிக்கிறது. கரோனா நெருக்கடி நிலவிய 2020-ஆம் ஆண்டில், 11 இந்திய நிறுவனங்களும் 14 சதவீத வளா்ச்சியைக் கண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மூன்றில் ஒரு பங்கு சொத்துமதிப்பைப் பெற்றுள்ளன.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 20.5 சதவீதம் வளா்ச்சியடைந்து, அதன் சொத்து மதிப்பு 16,880 கோடி டாலராக (சுமாா் ரூ.12.37 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. இதுதவிர, டாடா கன்சல்டன்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவா், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி லிமிடட், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனமும், அடுத்த இடங்களில் மைக்ரோசாஃப்ட், அமேஸான் ஆகிய நிறுவனங்களும் உள்ளன.