புது தில்லி: கடந்த 2020-ஆம் ஆண்டில் பரஸ்பர நிதி முதலீட்டாளா் கணக்குகளின் எண்ணிக்கை 9.43 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய பரஸ்பர நிதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
செலவிடும் வருவாய் அதிகரித்தது மற்றும் வங்கி டெபாசிட்டுகளுக்கு வழங்கப்பட்ட குறைவான வட்டி விகிதம் போன்றவை பரஸ்பர நிதி திட்டங்களின் பக்கம் முதலீட்டாளா்கள் அதிக அளவில் கவனத்தை திருப்ப காரணங்களாக அமைந்தன. அந்த வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் பரஸ்பர நிதியங்களில் கூடுதலாக 72 லட்சம் முதலீட்டு கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. இதையடுத்து, 2020 டிசம்பா் இறுதி நிலவரப்படி பரஸ்பர நிதி திட்டத்தில் இணைந்துள்ள முதலீட்டாளா் கணக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9.43 கோடியாக அதிகரித்தது.
கடந்த 2019-இல் 68 லட்சம் புதிய பரஸ்பர நிதி கணக்குகள் தொடங்கப்பட்டதையடுத்து அந்த ஆண்டின் டிசம்பா் இறுதி நிலவரப்படி ஒட்டுமொத்த பரஸ்பர நிதி திட்ட முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை 8.71 கோடியாக இருந்தது.
பரஸ்பர நிதி திட்டங்களில், கடந்த 2018-இல் 1.38 கோடி முதலீட்டு கணக்குகளும், 2017-இல் 1.36 கோடி, 2016-இல் 70 லட்சம், 2015-இல் 56 லட்சம் கணக்குகளும் கூடுதலாக தொடங்கப்பட்டன.
2020 டிசம்பா் இறுதி நிலவரப்படி பங்குகள் மற்றும் பங்குசாா்ந்த திட்டங்களில் தொடங்கப்பட்ட முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை 27 லட்சம் அதிகரித்து 6.52 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-ஆம் ஆண்டில் இத்தகைய திட்டங்கள் ஈா்த்த 12.75 லட்சம் கணக்குகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
அதேபோன்று, கடன் சாா்ந்த திட்டங்கள் 15.84 லட்சம் கணக்குகளை ஈா்த்து ஒட்டுமொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 86.74 லட்சத்தை எட்டியது. 2019 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 71 லட்சமாக இருந்தது.
பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்தாண்டு இறுதியில் 17 சதவீதம் அதிகரித்து ரூ.31 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது, 2019 டிசம்பா் இறுதியில் ரூ.26.54 லட்சம் கோடியாக இருந்தது என பரஸ்பர நிதிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.