ரானே (மெட்ராஸ்) நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.3.7 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ரானே நிறுவனம் நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் மொத்த வருவாயாக ரூ.306.6 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.96.3 கோடியுடன் ஒப்பிடுகையில் 218.4 சதவீத வளா்ச்சியாகும்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.3.7 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. அதேசமயம், முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.21.9 கோடியாக இருந்தது.
ஒட்டுமொத்த அடிப்படையில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.114.3 கோடியிலிருந்து 203.7 சதவீதம் அதிகரித்து ரூ.347.1 கோடியைத் தொட்டது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிகர லாபம் ரூ.15.2 கோடியாக இருந்தது. அதேசமயம், கடந்த 2021 நிதியாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.41.9 கோடியாக காணப்பட்டது.
அமெரிக்காவில் தேவை அதிரித்துள்ளதையடுத்து அந்நாட்டின் துணை நிறுவனம் மூலமான விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. தரம், உற்பத்தி திறன், வாடிக்கையாளா் விநியோகம் ஆகியவற்றில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைள் மூலம் செயல்பாடு மேம்பாடு கண்டு வருவதாக ரானே அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.