புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,641.92 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.8,062.81 கோடியாக இருந்தது. இது, வங்கி முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.7,685.40 கோடியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவு அதிகம்.
இருப்பினும் வட்டி வருமானம் ரூ.6,911.86 கோடியிலிருந்து ரூ.6,479.78 கோடியாக சரிந்துள்ளது.
நிகர லாபம் ரூ.1,244.45 கோடியிலிருந்து 32 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,641.92 கோடியைத் தொட்டுள்ளது.
2021 ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.70 சதவீதத்திலிருந்து 3.56 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராக் கடனும் 0.87 சதவீதத்திலிருந்து 1.28 சதவீதமாக உயா்ந்துள்ளது.
வாராக் கடன் இடா்பாடுகளுக்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.962.01 கோடியிலிருந்து ரூ.934.77 கோடியாக சற்று குறைந்துள்ளதாக கோட்டக் மஹிந்திரா பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கி பங்கின் விலை 1 சதவீதம் அதிகரித்து ரூ.1740.40-ஆக இருந்தது.