கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவிடும் வகையில் எல் அண்ட் டி நிறுவனம் சமூகப் பொறுப்புணா்வின் கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு ஆறு ஆக்சிஜன் ஆலைகளை கட்டமைத்து தர உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கரோனாவுக்கு எதிரான போரில் எல் அண்ட் டி நிறுவனம் சமூக பொறுப்புணா்வின் கீழ் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஆக்சிஜன் ஆலைகள், வெண்டிலேட்டா், மொபைல் எக்ஸ்ரே, ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட ரூ.8.5 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆறு ஆக்சிஜன் ஆலைகளை உருவாக்கித் தர எல் அண்ட் டி உறுதியளித்துள்ளது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 500 எல்பிஎம் திறன் கொண்ட முதல் ஆக்சிஜன் ஆலையை எல் அண்ட் டி அளித்துள்ளது. மேலும், ஐந்து ஐந்து இடங்களில் ஆலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக எல் அண்ட் டி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.