மீண்டும் 50,000-ஐ கடந்தது சென்செக்ஸ்: ஐடி, ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது.
மீண்டும் 50,000-ஐ கடந்தது சென்செக்ஸ்: ஐடி, ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 447 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 50,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் ஆட்டோ, ஐடி, பேங்க் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் நிலைபெற்றன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், கடந்த வாரம் வெளியான ஜிடிபி தரவுகள் முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளதால், அவர்கள் பங்குகளில் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சந்தை மதிப்பு ரூ.206.53 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான 3,177 பங்குகளில் 1,852 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,156 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 169 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.77 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ206.53 லட்சம் கோடியாக இருந்தது. 325 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 387 பங்குகள் வெகுவாக உயர்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பர் சர்க்யூட்) அடைந்தன. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 6.26 கோடியாக உள்ளது.
2-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 408.25 புள்ளிகள் கூடுதலுடன் 50,439.82-இல் தொடங்கி 49,807.12 வரை கீழே சென்றது. வர்த்தகத்தின் போது ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. இருப்பினும் வர்த்தகம் முடியும் தருவாயில் 50,439.82 வரை உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 447.05 புள்ளிகள் கூடுதலுடன் 50,296.89-இல் நிலைபெற்றது. 
தேசியப் பங்குச் சந்தையில்...:
தேசியப் பங்குச் சந்தையில் 1,063 பங்குகள் ஆதாயம் பெற்றன. 658 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 157.55 புள்ளிகள் உயர்ந்து 14,919.10-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது அதிகபட்சமாக 14,959.10 வரை உயர்ந்தது. பொதுத் துறை வங்கிப் பங்குகளில் இரண்டாவது நாளாக லாபப் பதிவு இருந்ததால் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 0.17 சதவீதம் சரிவைச் சந்தித்தது. மற்ற துறை குறியீடுகள் அனைத்தும் ஏற்றம் பெற்றன. இதில், நிஃப்டி ஐடி, ஆட்டோ குறியீடுகள் 3 சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com