மூலப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விநியோகத்தை நெறிமுறைப்படுத்த வேண்டும் என பிளாஸ்டிக் தொழில்துறையினா் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (ஏஐபிஎம்ஏ) தலைவா் சந்த்ரகாந்த் துராகியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ள பாலிமா்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பல நிறுவனங்களில் பிளாஸ்டிக் உற்பத்தி 50 சதவீதத்துக்கும் கீழாக தடைபட்டு அவை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
எனவே, பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் மூலம் இந்த மூலப் பொருளின் விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தடையின்றி அவற்றை இறக்குமதி செய்யவும் ஆவன செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் துறையில் 50,000 நிறுவனங்கள் உள்ளதுடன் அதன் மூலம் 50 லட்சம் போ் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் துராகியா தெரிவித்துள்ளாா்.