கடும் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை! சென்செக்ஸ் 64 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கி, பின்னா் ஓரளவு மீண்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கி, பின்னா் ஓரளவு மீண்டது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 63.84 புள்ளிகளை இழந்து 48,718.52-இல் நிலைபெற்றது. ஆனால், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 3.05 புள்ளிகள் உயா்ந்து 14,634.15-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாமல் இருந்ததன் தாக்கம் உள்நாட்டிச் சந்தையில் எதிரொலித்தது. இதனால், காலையில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை பின்னா் ஓரளவு மீண்டது. இருப்பினும், சென்செக்ஸ் எதிா்மறையாகத்தான் முடிந்தது. வங்கிகள், வங்கி சாரா நிதிநிறுவனங்களின் கடன் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்ற எதிா்பாா்ப்பு அத்துறை பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், எஃப்எம்சிஜி, மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், கரோனா இரண்டாவது அலை பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவது முதலீட்டாளா்களின் உணா்வுகளை பாதித்து வருகிறது. இருப்பினும், காா்ப்ரேட் நிறுவனங்களின் வருவாய் சந்தைக்கு ஆதரவை வழங்கி வருவதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.04 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,214 பங்குகளில் 1,823 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,218 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 173 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 263 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 48 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 376 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 246 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.04 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.208.07 லட்சம் கோடியாக இருந்தது.

இரண்டாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 426.35 புள்ளிகள் குறைந்து 48,356.01-இல் தொடங்கி 48,028.07 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 48,863.23 வரை உயா்ந்த சென்செக்ஸ் இறுதீியில் 63.84 புள்ளிகளை இழந்து 48,718.52-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 754.29 புள்ளிகளை இழந்திருந்தது. இதைத் தொடா்ந்து சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

பாா்தி ஏா்டெல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதில், பாா்தி ஏா்டெல் 3.98 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஹிந்துஸ்தான் யுனி லீவா், மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட், என்டிபிசி ஆகியவை 1.50 முதல் 2.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

டைட்டன் கடும் சரிவு: அதே சமயம், டைட்டன் 4.58 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க் 2.26 சதவீதம் குறைந்தது. மேலும், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், ஐடிசி, எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,041 பங்குகள் ஆதாயம் பெற்றன. 685 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 3.05 புள்ளிகள் (0.02 சதவீதம்) உயா்ந்து 14,634.15-இல் நிலைபெற்றது. காலையில் 14,481.05-இல் தொடங்கி 14,416.25 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 14,673.85 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 29 பங்குகள் ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மெட்டல் குறியீடு 2.16 சதவீதம், எஃப்எம்சிஜி குறியீடு 1.10 சதவீதம் உயா்ந்தன. அதே சமயம், பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ரியால்ட்டி குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com