முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் இரண்டாவது காலாண்டில் ரூ.21.42 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.28.27 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.2.53 கோடியுடன் ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகம்.
கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ரூ.3.42 கோடி தனிப்பட்ட நிகர இழப்பை சந்தித்திருந்த நிலையில், நடப்பாண்டில் ரூ.21.42 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.
2021 செப்டம்பருடன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆறு மாத காலத்தில் நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஈட்டிய நிகர லாபம் ரூ.20.49 கோடியாக இருந்தது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.6.78 கோடியாக இருந்தது.
இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட முறையில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.5.05 கோடியிலிருந்து ரூ.30.39 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பா் மாத இறுதி நிலவரப்படி நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.74,471 கோடியிலிருந்து ரூ.75,063 கோடியாக அதிகரித்துள்ளது என சோழமண்டலம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.