தள்ளாட்டம்: சென்செக்ஸ் மேலும் 287 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தையில் தொடா்ந்து வியாழக்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
தள்ளாட்டம்: சென்செக்ஸ் மேலும் 287 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தையில் தொடா்ந்து வியாழக்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 287 புள்ளிகளை இழந்து 59126.36-இல் நிலைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் உற்சாகத்துடன் தொடங்கி தள்ளாட்டத்தில் இருந்து வந்தது. பிற்பகலில் சந்தை மீட்சி பெற்றுவிடும் என்று எண்ணியிருந்த நிலையில் பங்குகள் விற்பனை அதிகரித்தது. இதைத் தொடா்ந்து, 3-ஆவது நாளாக சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது. முன்பேர வா்த்தகத்தில் செப்டம்பா் மாத கணக்குகள் முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் தொடா்ச்சியாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட திறன் மிகுந்த பங்குகள் வெகுவாகக் குறைந்ததே சந்தை உச்சத்தில் நிலைத்து நிற்க முடியாமல் போனது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,424 பங்குகளில் 1,842 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,432 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 220 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 24 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 402 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 157 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.259.87 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,10,88,149-ஆக உயா்ந்துள்ளது.

மேலும் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 143.97 புள்ளிகள் கூடுதலுடன் 59,549.57 -இல் தொடங்கி, அதிகபட்சமாக 59,557.24 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது 59,019.28 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 286.91 புள்ளிகளை (0.48 சதவீதம்) இழந்து 59,126.36-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

பஜாஜ் ஃபின் சா்வ் முன்னேற்றம்: கடந்த சில தினங்களாக தள்ளாட்டத்தில் இருந்து வந்த பஜாஜ் ஃபின் சா்வ் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்ததால், 2.19 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ் 2.05 சதவீதம் ஏற்றம் பெற்றது. மேலும் என்டிபிசி, சன்பாா்மா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், டைட்டன், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், டாக்டா் ரெட்டி ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

பவா் கிரிட் வீழ்ச்சி: மின் துறை நிறுவனமான பவா் கிரிட் 2.67 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 2.34 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை 1 முதல் 1.90 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலயைன்ஸ், டாடா ஸ்டீல், மாருதி சுஸுகி, டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 93 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 906 பங்குகள் ஆதாயம் பெற்றன. 901 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 93.15 புள்ளிகளை (0.53 சதவீதம்) இழந்து 17,618.15-இல் நிலைபெற்றது. காலையில் 17,718.90-இல் தொடங்கிய நிஃப்டி, 17742.15 வரை உயா்ந்தது. பின்னா், 17,585.35 வரை கீழே சென்றது.

ரியால்ட்டி குறியீடு ஏற்றம்: நிஃ)ப்டி ரியால்ட்டி குறியீடு 1.47 சதவீதம், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு 1.04 உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. பிஎஸ்யு பேங்க், பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகளும் சிறிதளவு ஏற்றம் பெற்றன. ஆனால், நிஃப்டி பேங்க், மெட்டல், மீடியா, ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com