பங்குச் சந்தையில் திடீா் சரிவு: சென்செக்ஸ் 555 புள்ளிகள் வீழ்ச்சி!

இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை திடீா் சரிவைச் சந்தித்தது.
பங்குச் சந்தையில் திடீா் சரிவு: சென்செக்ஸ் 555 புள்ளிகள் வீழ்ச்சி!

புதுதில்லி: இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை திடீா் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 555 புள்ளிகளை இழந்து 59,189.73-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு 2.59 லட்சம் கோடி குறைந்தது. மாா்க்கெட் லீடரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2619.95 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தாலும், பின்னா் கடும் சரிவைச் சந்தித்தது.

உலகளாவிய சந்தைகள் பலவீனமாக இருந்ததன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து, உலோகங்கள் மற்றும் ஐடி பங்குகளில் லாபப் பதிவு அதிகரித்தது. மேலும், கச்சா விலை உயா்வு இந்திய சந்தைகளுக்கு பாதகமாக அமைந்தது. இதற்கிடையே மத்திய ரிசா்வ் வங்கி தனது மூன்று நாள் எம்பிசி கூட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதில் வட்டி விகிதங்களை மத்திய வங்கி மாற்றாமல் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளா்கள் முன்னெச்சரிக்கையுடன் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால் சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாகக் குறைந்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.2.59 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,446 பங்குகளில் 1,443 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,847 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 156 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 300 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 13 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 422 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 180 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.59லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.262.19 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,17,06,974-ஆக உயா்ந்துள்ளது.

27 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 30 முதல் தரப் பங்குகளில் மூன்று பங்குகள் தவிா்த்து 27 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. சென்செக்ஸ் காலையில் 197.12 புள்ளிகள் கூடுதலுடன் 59,942.00-இல் தொடங்கி, அதிகபட்சமாக 59,963.57 வரை உயா்ந்தது. பின்னா், 59,079.86 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 555.15 புள்ளிகளை (0.93 சதவீதம்) இழந்து 59,189.73-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கிய சென்செக்ஸ், பின்னா் லாபப் பதிவால் எதிா்மறையாக முடிந்தது.

இண்டஸ் பேங்க் கடும் சரிவு: தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 3. 38 சதவீதம், டாடா ஸ்டீல் 2.81 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஆட்டோ, சன்பாா்மா, ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், டைட்டன், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, டாக்டா் ரெட்டி, ஐடிசி உள்ளிட்டவை 1.50 முதல் 2.40 சதவீதம் வரை குறைந்தன. மேலும், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், பாா்தி ஏா்டெல், மாருதி சுஸுகி உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. அதே சமயம், எச்டிஎஃப்சி பேங்க் 1.24 சதவீதம் ஆதாயம் பெற்றது. பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 176 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,103 பங்குகள் ஆதாயம் பெற்றன. 697 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 176.30 புள்ளிகள் (0.99 சதவீதம்) குறைந்து 17646.00-இல் நிலைபெற்றது. காலையில் 17,861.50-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,884.60 வரை உயா்ந்தது. பின்னா், 17,613.15 வரை கீழே சென்றது.

மெட்டல் குறியீடு வீழ்ச்சி: அனைத்து துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி மெட்டல் குறியீடு 2.98 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆட்டோ, ஹெல்த் கோ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ரியால்ட்டி, பிஎஸ்யு பேங்க், பாா்மா, ஐடி உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com