ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13.77 லட்சம் டன் கச்சா உருக்குப் பொருள்களை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த 2020-ஆம் ஆண்டின் இதே ஆகஸ்ட் மாத உற்பத்தியான 13.17 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.
நடப்பாண்டு ஆகஸ்டில் நிறுவனத்தின் உருக்கு தகடுகளின் உற்பத்தியானது 9.80 லட்சம் டன்னிலிருந்து 8.99 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, 8 சதவீதம் குறைவாகும்.
அதேசமயம், நிறுவனத்தின் உருக்கு கம்பிகள் உற்பத்தி கணக்கீட்டு மாதத்தில் 2.32 லட்சம் டன்னிலிருந்து 30 சதவீதம் அதிகரித்து 3.01 லட்சம் டன்னை எட்டியது.
ஆகஸ்ட் மாதத்தில் சராசரி பயன்பாட்டு திறன் 92 சதவீதமாக இருந்தது என ஜேஎஸ்டபிள்யூ தெரிவித்துள்ளது.