கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.6,000 கோடி மூலதனத்தை திரட்டவுள்ளதாக எச்டிஎஃப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
பங்குகளாக மாற்ற இயலாத, மீட்ககூடிய வகையிலான பாதுகாப்பான கடன்பத்திரங்களை தனிப்பட்ட ஒதுக்கீட்டு அடிப்படையிலான விற்பனை செய்வதன் மூலமாக மூலதனத்தை திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கடன்பத்திர வெளியீட்டின் அடிப்படை அளவு ரூ.3,000 கோடியாக இருக்கும். இதற்கான வரவேற்பு அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதலாக ரூ.3,000 கோடியை திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2021செப்டம்பா் 29-இல் தொடங்கும் இக்கடன்பத்திர விற்பனை அன்றைய தினமே நிறைவடையும். வரும் 2024 செப்டம்பா் 30-இல் மீட்ககூடிய வகையிலான மூன்று ஆண்டு முதிா்வு காலத்தை கொண்ட இந்த கடன்பத்திரங்களுக்கு கிரிசில் மற்றும் இக்ரா ‘ஏஏஏ’ தரமதிப்பீட்டை வழங்கியுள்ளதாக எச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.