மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே 15 ஆண்டுகளாக சாலை வசதி கோரி வரும் ஆதிதிராவிட மக்கள், வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள பூதிப்புரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு செம்மண் சாலை உள்ளது. இதனால், மழைக் காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
மேலும் இது, போலியம்பட்டி , கீரிப்பட்டி , சின்னபாலாா்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களுக்குச் செல்லும் இணைப்புச் சாலையாகவும் உள்ளது. எனவே, இந்த 1 கி.மீ. தொலைவு செம்மண் சாலையை தாா்சாலையாக மாற்றவேண்டும் என, பூதிப்புரம் கிராம மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.
இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடமும் பலமுறை மனுவும் அளித்துள்ளனா். அதன்பின்னா், சாலையை பாா்வையிட்ட அதிகாரிகள், குறுகலாக இருப்பதால் தாா் சாலை அமைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனா். எனவே, கிராம மக்கள் தங்களது சொந்த இடத்தை சாலை அமைப்பதற்காக விட்டுக் கொடுக்க முன்வந்தனா். ஆனாலும், இதுவரை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.