வங்கி, ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 702 புள்ளிகள் முன்னேற்றம்

பங்குச் சந்தை வியாழக்கிழமை நேர்மறையாக முடிவடைந்தது. ஐடி, நிதி, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 702 புள்ளிகள் உயர்ந்தது.
வங்கி, ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 702 புள்ளிகள் முன்னேற்றம்



புதுதில்லி:  பங்குச் சந்தை வியாழக்கிழமை நேர்மறையாக முடிவடைந்தது. ஐடி, நிதி, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 702 புள்ளிகள் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.49 லட்சம் கோடி அதிகரித்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக, ஐடி, எஃப்எம்சிஜி, வங்கி, எரிசக்தித் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.  முன்பேர வர்த்தகத்தில் ஏப்ரல் மாத கணக்கு முடிக்க கடைசி நாளாக இருந்ததால், ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் இன்ஃபோசிஸ்  உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்ததே சந்தை ஏற்றத்துக்குக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ.4,064.54  கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1,621 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,518 நிறுவனப் பங்குகளில் 1,788 பங்குகள் விலை குறைந்தன.  1,621 பங்குகள் விலை உயர்ந்தன. 109  பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 149 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 19  பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.  சந்தை மூலதன மதிப்பு ரூ.2.49 லட்சம் கோடி உயர்ந்து, வர்த்தக முடிவில் ரூ.269.47 லட்சம் கோடியை எட்டியது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.38  கோடியை  தாண்டியது.
702 புள்ளிகள் உயர்வு:  காலையில் 476.92 புள்ளிகள் கூடுதலுடன் 57,296.31-இல் தொடங்கிய சென்செக்ஸ்,  56,936.94 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 57,790.85 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 701.67 புள்ளிகள் உயர்ந்து 57,521.06-இல் நிலைபெற்றது. 

சென்செக்ஸில் 26 பங்குகள் விலை உயர்வு: 30 முதல்தரப்  பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், பார்தி ஏர்டெல், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய நான்கு பங்குகள் மட்டும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், மற்ற 26 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில், முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் 4.55 சதவீதம், ஏஷியன் பெயிண்ட் 3.18 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.  மேலும், பவர் கிரிட், என்டிபிசி, எல் அண்ட் டி, எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், சன் பார்மா, ரிலையன்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், மாருதி சுஸýகி, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் 
இருந்தன.
நிஃப்டி 207  புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 922 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,014 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 4 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்தன. 45 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி குறியீடு 206.65 புள்ளிகள் (1.21 
சதவீதம்)  உயர்ந்து 17,245.05-இல் நிறைவடைந்தது. காலையில் 151.10 புள்ளிகள் கூடுதலுடன் 17,189.50-இல் தொடங்கிய நிஃப்டி, 17,071.05 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,322.50 வரை உயர்ந்தது. 

மீடியா குறியீடு மட்டும் வீழ்ச்சி:

தேசிய பங்குச் சந்தையில் மீடியா குறியீடு மட்டும்  3.15 சதவீதம் குறைந்திருந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.  இதில், நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 2.20 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது.  நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், ஐடி, கன்ஸ்யூமர் 
டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 1.20 சதவீதம் வரை உயர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com