புது தில்லி: மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சிப்லா நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.729 கோடியாக இருந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
2021 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டி மொத்த வருவாய் ரூ.5,479 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.5,169 கோடியுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.748 கோடியிலிருந்து 2.6 சதவீதம் குறைந்து ரூ.729 கோடியானது.
குறிப்பாக, உள்நாட்டு விற்பனையின் வாயிலாக ஈட்டிய வருவாய் மூன்றாவது காலாண்டில் ரூ.2,231 கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து ரூ.2,518 கோடியாக இருந்தது.
அதேபோன்று, வட அமெரிக்க வா்த்தகத்தின் மூலமாக கிடைத்த நிறுவனத்தின் வருவாயும் 9 சதவீதம் உயா்ந்து ரூ.1,124 கோடியாக இருந்தது என சிப்லா தெரிவித்துள்ளது.