ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிவு

இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 110 புள்ளிகள் குறைந்தது.
ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிவு

இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை, புதன்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 110 புள்ளிகள் குறைந்தது. இருப்பினும், சந்தை மூலதன மதிப்புரூ.22 ஆயிரம் கோடி உயர்ந்தது.
 இந்த வாரத் தொடக்கத்திலிருந்து சந்தையில் காளையின் ஆதிக்கம் காணப்பட்டது. குறிப்பாக, செவ்வாய்க்கிழமை யாரும் எதிர்பார்க்காத நிலையில், சந்தை திடீரென எழுச்சி பெற்று பங்கேற்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், புதன்கிழமை தொடக்கம் நன்றாக இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல கரடியின் பிடி இறுகியதால், சந்தை சரிவில் முடிந்தது. இதனால், இரண்டு நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 முதல் பாதியில் சந்தை நேர்மறையாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் ரியல் எஸ்டேட், பிஎஸ்யு பேங்க், ஐடி பங்குகளில் லாபப் பதிவு இருந்ததே சரிவுக்கு முக்கியக் காரணம். இருப்பினும், ஃபார்மா, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததால் பெரிய சரிவு தவிர்க்கப்பட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 1,866 நிறுவனப் பங்குகள் விலை சரிவு:
 மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,466 நிறுவனப் பங்குகளில் 1,479 பங்குகள்ஆதாயம் பெற்ற பட்டியலில் இருந்தன. 1,866 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலுக்கு வந்தன. 121 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 59 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 34 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.22 ஆயிரம் கோடி உயர்ந்து, வர்த்தக முடிவில் ரூ.255.77 லட்சம் கோடியைத் தொட்டது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.60 கோடியை கடந்தது.
 சென்செக்ஸ் திடீர் சரிவு: காலையில் 236.42 புள்ளிகள் கூடுதலுடன் 54,554.89-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 54,786.00 வரை உயர்ந்தது. பின்னர், 54,130.89 வரை கீழே சென்ற சென்ற சென்செக்ஸ், இறுதியில் 109.94 புள்ளிகள் (0.20 சதவீதம்) குறைந்து 54,208.53-இல் நிலைபெற்றது.
 பவர் கிரிட் கடும் வீழ்ச்சி:
 சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 பங்குகளில் 13 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், பிரபல பொதுத் துறை மின் நிறுவனமான பவர் கிரிட் 4.55 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், என்டிபிசி உள்ளிட்டவை 1.50 முதல் 2.20 சதவீதம் வரை குறைந்தன. மேலும், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 ஹெச்யுஎல் முன்னேற்றம்: அதே சமயம், பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்) 2.02 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.01 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஏசியன் பெயிண்ட், சன்பார்மா, ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸுகி, ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன.
 நிஃப்டி 19 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 1,065 பங்குகள் ஆதாயம் பெற்றன. 885 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 29 பங்குகள் ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. காலையில் 58.85 புள்ளிகள் கூடுதலுடன் 16,318.15-இல் தொடங்கிய நிஃப்டி குறியீடு, அதிகபட்சமாக 16,399.80 வரை உயர்ந்தது. பின்னர், 16,211.20 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 19 புள்ளிகள் (0.12 சதவீதம்) குறைந்து 16,240.30-இல் நிலைபெற்றது.
 பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள்
 சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் முறையே 1.57 சதவீதம் மற்றும் 1.75 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி ஐடி, மெட்டல், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 0.50 சதவீதம் வரை குறைந்தன. அதே சமயம், பார்மா, எஃப்எம்சிஜி குறியீடுகள் முறையே 1.06 சதவீதம் மற்றும் 1.25 சதவீதம் உயர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com