இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 89.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகில் தாவர எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்வதில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியின் பங்கு 16 சதவீதமாக உள்ளது.
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் தொடங்குவதற்கு முன், உக்ரைனில் இருந்து 70 சதவீத அளவிலும், ரஷியாவில் இருந்து 20 சதவீத அளவிலும் சூரியகாந்தி எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. எனினும் கடந்த பிப்ரவரி மாதம் இருநாடுகளுக்கு இடையே போர் தொடங்கிய பின், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ரஷியாவும் ஆர்ஜென்டீனாவும் இந்தியாவுக்கு சூரியகாந்தி எண்ணெயை விநியோகிக்கும் முக்கிய நாடுகளாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷியா, ஆர்ஜென்டீனா, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 1.35 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 71,340 டன் சூரியகாந்தி எண்ணெயைவிட 89.6 சதவீதம் அதிகம் என்று தாவர எண்ணெய் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயிலைவிட, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயிலின் அளவு 32.64 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைவிட, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 33 சதவீதம் அதிகரித்துள்ளது.