முத்து நகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா பேராலயத்துக்கு என்று தனிப்பெருமைகள் பல உண்டு. இந்த ஆலயம் உருவான விதம் முதல் தற்போது வரை பல அதிசயங்களை அன்னை நிகழ்த்தி வருகிறார் என்றே கூறலாம்.
கி.பி. 1535 ஆம் ஆண்டிலேயே தூத்துக்குடி கடற்கரை பகுதி மக்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கென்று தனியாக ஆலயம் இல்லை. கோவா மாநிலத்தைச் சேர்ந்த பெரிய குரு மிக்கேல் வாஸ், கொச்சி வட்டார குரு அருட்தந்தை கொன்சால்வஸ் ஆகியோர் தூத்துக்குடியில் தங்கியிருந்து மதம் மாறிய மக்களுக்காக திருநீராட்டு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள்.
மக்களின் பொது வழிபாட்டிற்காக 1538 ஆம் ஆண்டு கொன்சால்வஸால் சிறிய அளவில் ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயமே இந்தப் பகுதியின் முதல் பங்கு ஆலயம் என்ற பெருமையைப் பெற்றது. 1582ஆம் ஆண்டு அருட்தந்தை திதாக்குஸ் டிகுணா அடிகளாரின் பெருமுயற்சியால் ஆலயம் விரிவுபடுத்தப்பட்டு கான்கிரீட் கட்டடமாக கட்டப்பட்டது. புனித பேதுரு ஆலயத்தில் இருந்த மாதா திருச்சொரூபம், புதிய ஆலயத்தின் மையப்பகுதியில் நிறுவப்பட்டது. 1582 ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கொச்சி மறைமாவட்ட ஆயர் தவோரா பிரிட்டோ ஆண்ட கோகேயால் புதிய ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அதே நாளிலேயே ஆலயத்தின் திருநிலைப்பாட்டு ஆண்டு விழாவாக கொண்டாடப்பட்டது. அதுவே காலப்போக்கில் பனிமய மாதா ஆலயத்தின் திருவிழா நாளாகவும் மாறிப்போனது. தூத்துக்குடி இயேசு சபை தலைமை இல்லத்தின் திருவிழாவும் பனிமய அன்னை திருவிழாவோடு சேர்த்து கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பகுதியில் உள்ள இயேசு சபை துறவிகள் தங்களது உறுதிமொழியை புதுப்பித்துக்கொள்ள ஆலயத்திற்கு வரும்போது, பக்தர்களும் ஆலயத்திற்கு ஒருசேர வர அன்னையின் திருவிழா பெருவிழாவாகமாறிப்போனது.
கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட புனித சவேரியார், 1549ஆம் ஆண்டு சீனா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். மணிலா நகருக்கு சென்றபோது அங்குள்ள கன்னியர் மடம் ஒன்றில் அழகிய அன்னையின் திருவுருவ சிலையைக் கண்டார். அதை தூத்துக்குடி மக்கள் வணங்கி வழிபாடு நடத்த பரிசாக வழங்க வேண்டும் என்று கன்னியர்களிடம் கேட்டுகொண்டார். ஆனால், கன்னியர்கள் முதலில் அதற்கு சம்மதிக்கவில்லை. 1952ஆம் ஆண்டு சவேரியார் மரணமடைந்தார்.
சவேரியார் செய்த அற்புதங்களை கேட்டறிந்த கன்னியர்கள் மனம் மாறினார்கள். சவேரியார் கேட்டதை கொடுக்க முன்வந்தனர். அதன்படி அன்னையின் திருவுருவச் சிலையை தூத்துக்குடி மக்கள் வணங்கி ஏற்றம்பெற தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர். 1555ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அன்னையின் திருவுருவம் ஒரு தோணி மூலம் தூத்துக்குடி வந்தடைந்தது. அன்று முதல் பனிமய மாதா ஆலயத்தின் திருச்சொரூபமாக அச்சிலை போற்றப்படுகிறது.
கனிவுமிகு கண்களும், பாசமிகு பார்வையும், பக்தர்களை வாஞ்சையோடு பார்க்கும் சாந்தமும், அருள் பொழியும் முகமுமாக விளங்கும் அன்னையின் அழகை சொற்களால் விளக்கிவிடமுடியாது. அன்னையின் இடக்கையில் மார்போடு அணைப்பில் இருக்கும் குழந்தையும், வலக்கையில் விதைகள் நிறைந்த மாதுளைப்பழமும் அன்னையை இரக்கத்தின் மாதாவாக விளங்கச் செய்கிறது.
இடி தாங்கிய அன்னை
1707ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் தூத்துக்குடி நகரத்தையே தீக்கிரையாக்கும் உக்கிரத்தோடு இடியொன்று பூமியை நோக்கி வந்ததாகவும், பனிமய அன்னை அந்த இடியை தன்னுள் உள்வாங்கி தூத்துக்குடி நகரத்தை காத்துக்கொண்டாள் என்றும் நம்பப்படுகிறது. இடியை தாங்கியதால் அன்னைக்கு எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. ஆனால், அன்னையின் உருவம் கருநீல வண்ணத்துக்கு மாறியிருக்கிறது. அன்னையின் திருவுருவம் மீது படிந்திருந்த கருநீல வண்ணத்தை அகற்ற இறை மக்கள் 40 நாள்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இறுதி நாளில் இயேசு சபையின் மாநில தலைவர் அன்னையின் மேனியை வெள்ளைத் துணியைக் கொண்டு துடைத்திருக்கிறார். நொடிப்பொழுதில் கருநீல வண்ணம் அகன்று பிரகாசமாக அன்னையின் திருச்சொரூபம் காட்சியளித்திருக்கிறது என்று
சொல்கிறார்கள் அருட் தந்தையர்கள்.
இந்தப் பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அன்னையை தரிசிக்க திருவிழா காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், நமது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சாதி, மத, இன பாகுபாடின்றி அனைத்து மக்களும் வருகிறார்கள். இந்த திருவிழா கிறிஸ்துவர்களின் திருவிழா மட்டுமல்ல, ஒட்டுமொத்த முத்துநகரின் பெருவிழா. தூய பனிமய அன்னையின் திருவிழா ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து ஒரு சமய நல்லிணக்க விழாவாகவே கொண்டாடப்படுகிறது என்றால் அது மிகையாகாது.